#ICCWTC ஃபைனல்: தவறான ஜெர்சியை போட்டு களத்திற்கு வந்த பும்ரா..! ஒரு ஓவர் வீசிவிட்டு ஓடிப்போய் மாற்றினார்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 5ம் நாள் ஆட்டத்தில் இந்திய ஃபாஸ்ட் பவுலர் பும்ரா தவறான ஜெர்சியை அணிந்து களத்திற்கு வந்தார். பின்னர் ஒரு ஓவரை வீசிவிட்டு ஓய்வறைக்கு சென்று மாற்றிவிட்டு வந்தார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது. வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதுமே மழையால் ரத்தானது.
5ம் நாளான இன்றைய ஆட்டமும் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை பும்ரா வீசினார். களத்திற்கு வரும்போது தவறான ஜெர்சியை அணிந்து வந்தார் பும்ரா. ஐசிசி தொடர்களில் அனைத்து அணிகளும், ஜெர்சியின் மத்தியில் நாட்டின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சிதான் அணிய வேண்டும். ஆனால் பும்ரா தவறுதலாக ஸ்பான்ஸர் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்துவந்துவிட்டார்.
முதல் ஓவரை அவர் தான் வீசினார். ஏற்கனவே போட்டி தாமதமாக தொடங்கியதால், நேரத்தை வீணடிக்காமல், முதல் ஓவரை வீசிவிட்டு, அதன்பின்னர் அடுத்த ஓவரில் ஓடிச்சென்று ஜெர்சியை மாற்றிவிட்டுவந்தார்.
இன்றைய ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் ஜோடியை ஷமி பிரித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர்களை ரன்னே அடிக்கவிடாமல் டைட்டாக பந்துவீசினர் இந்திய பவுலர்கள். ரன்னே கிடைக்காத விரக்தியில் அடிக்க முயன்று ஷமியின் பந்தில் டெய்லர் ஆட்டமிழந்தார்.