#INDvsENG ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஜாக் லீச்..! ரோஹித் - ரஹானே பார்ட்னர்ஷிப் தகர்ப்பு
இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா - ரஹானே பார்ட்னர்ஷிப்பை உடைத்து பிரேக் கொடுத்தார் ஜாக் லீச்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாக, ரோஹித்துடன் இணைந்து நன்றாக ஆடிய புஜாரா, லீச்சின் சுழலில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி மொயின் அலியின் சுழலில் டக் அவுட்டானார்.
86 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ரோஹித் சர்மா நிலைத்து ஆடி சதமடித்தார். 3 விக்கெட்டுக்கு பிறகு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரஹானே, அரைசதம் அடித்தார்.
சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய ரோஹித், 150 ரன்களை கடந்தார். ரோஹித்தும் ரஹானேவும் இணைந்து ஆடி 4வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர். இரட்டை சதத்தை நோக்கி ரோஹித்தும் சதத்தை நோக்கி ரஹானேவும் ஆடிக்கொண்டிருந்த நிலையில், ரோஹித்தை 161 ரன்னில் வீழ்த்தி ஜாக் லீச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ரோஹித் அவுட்டான அடுத்த ஒருசில ஓவர்களிலேயே ரஹானே 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட்டும் அஷ்வினும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.