கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதிக்க ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் வரும் 14ம் தேதி(சனிக்கிழமை) நடக்கவுள்ளது.  

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், ஐபிஎல்லை நடத்துவது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை காண மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என்பதால், கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், அது மிகவும் ஆபத்தானது என்பதால், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிரச்னையாகியுள்ளது. 

இந்தியாவிலும் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என ஐபிஎல் நடக்கும் பல்வேறு நகரங்களில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு, மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. கர்நாடக அரசும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

இவ்வாறு ஐபிஎல் நடத்துவதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் இருந்துவரும் நிலையில், இதுகுறித்து விவாதிக்க வரும் 14ம் தேதி பிரிஜேஷ் படேலின் தலைமையில் ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, பொருளாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளனர். 

ஐபிஎல் கண்டிப்பாக திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே கங்குலி கூறியிருந்த நிலையில், தற்போது ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியுள்ளது.