#IPL2021 ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது நடத்தப்படும்..? ரசிகர்களுக்கு முக்கியமான அப்டேட்
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவரும் வேளையில், ஐபிஎல் மட்டுமே மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை அளித்துவந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது கொரோனா.
ஒரு சீசனில் மொத்தம் 60 போட்டிகள். 56 லீக் போட்டிகள். 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீதமுள்ள போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.