டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அசாம் கானுக்கு மாற்று வீரராக சீனியர் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது எடுக்கப்பட்டதை விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். 

டி20 உலக கோப்பை வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், அறிவிக்கப்பட்ட அணிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அக்டோபர் 10 வரை செய்யலாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகிஸ்தான் அணி தேர்வு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், நேற்று 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. அசாம் கான் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே அனுபவ விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது மற்றும் ஹைதர் அலி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்ட ஃபகர் ஜமான் அணியில் சேர்க்கப்பட்டு, மெயின் அணியில் இடம்பெற்றிருந்த குஷ்தில் ஷா ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டார்.

மேலும் காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய சொஹைப் மக்சூதுக்கு பதிலாக சீனியர் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் சர்ஃபராஸ் அகமது சேர்க்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், தேர்வாளர்கள் பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் அணி தேர்வு செய்ய விரும்பினால் வயது மற்றும் மற்ற விஷயங்களை எல்லாம் பற்றி கவலைப்படக்கூடாது. சர்ஃபராஸை எப்படியும் ஆடும் லெவனில் சேர்க்கப்போவதில்லை. பிறகு அவரையும் அணியில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? கடந்த 2 ஆண்டுகளில் அவர் எத்தனை டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்? முன்னாள் கேப்டன் என்பதற்காக சும்மா அவரை அணியில் எடுத்துவைப்பது சரியான செயல் அல்ல என்று இன்சமாம் உல் ஹக் சாடியுள்ளார்.