Rohit Sharma: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு
ரோஹித் சர்மாவிற்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் வரும் 16ம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்கிறது.
அதற்கு முன்பாக இந்திய வீரர்கள் மும்பையில் பயோ பபுளில் உள்ளனர். மும்பையில் பயிற்சியில் ஈடுபடும்போது ரோஹித் சர்மாவிற்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் பிரியன்க் பன்சால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி பயோ பபுளிலும் இணையவில்லை. அவரை பிசிசிஐயால் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. எனவே பயோ பபுளில் இல்லாமல் விராட் கோலி தென்னாப்பிரிக்கா செல்வது கடினம். அதனால், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக முதல் முறையாக அறிவிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா தான் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்த வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில், ரோஹித்தும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவு.