#ENGvsIND இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாசிட்டிவ்
இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்திலேயே இருக்கிறது.
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயோ பபுள் விதிகளை பின்பற்றி தங்கியிருக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தீவிரமாக தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து, அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் மற்ற வீரர்கள் தொடர்பில் இல்லை என்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா உறுதியான நிலையில், யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதிய ஆட்டத்தை நேரில் பார்க்க சென்றபோது, ரசிகர் ஒருவருடன் முகக்கவசம் அணியாத நிலையில் ரிஷப் பண்ட் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து, விம்பிள்டன் ஆகிய போட்டிகளை நேரில் காண்பதை தவிர்க்குமாறு இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.