ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 224 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோரையே அடித்தது. ஆனால் பவுலர்களின் புண்ணியத்தால் இந்திய அணி வென்றது.  

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்தது. ஆனால் பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 

அதேபோலவே தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆனாலும் தோனி களத்தில் நின்றதால், வழக்கம்போல டெத் ஓவர்களில் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். 

52 பந்துகள் பேட்டிங் செய்து 28 ரன்கள் மட்டுமே அடித்தார். கேதரும் மந்தமாகவே ஆடினார். விராட் கோலி 30.3 ஓவரில் அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 135. அதன்பின்னர் கேதரும் தோனியும் 15 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதை ஈடுகட்டும் விதமாக இருவரும் டெத் ஓவர்களிலும் அடித்து ஆடாமல் அவுட்டாகிவிட்டனர். அதனால் தான் இந்திய அணி 224 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோரை அடித்தது. பவுலர்களின் புண்ணியத்தால் இந்திய அணி வென்றது. 

ஸ்பின் பவுலர்களின் 39 ஓவர்களை ஆடி 119 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடித்தது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 150 பந்துகள் டாட் பந்துகள். இன்னிங்ஸின் பாதி பந்துகளில் ரன்னே அடிக்கவில்லை இந்திய அணி. அந்த 150 பந்துகளில் 50 சிங்கிள்கள் எடுத்திருந்தால் கூட ஸ்கோர் 274 ரன்கள் ஆகியிருக்கும். ஆனால் அதை செய்யவில்லை. அதனால் தான் 9 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. 

பொதுவாக இந்திய வீரர்கள் ஸ்பின்னை நன்றாக ஆடக்கூடியவர்கள். அதிலும் குறிப்பாக மிடில் ஓவர்களில் ரொம்ப மோசமாக ஆடாமல் டீசண்ட்டான ரன்ரேட்டை மெயிண்டன் செய்யக்கூடியவர்கள். ஆனாலும் நேற்றைய போட்டியில் ஆஃப்கான் ஸ்பின்னர்களை ஆடிய விதம் கவலைக்குரியது.