சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, 185 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. விராட் கோலி, ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகிய நால்வருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர்.

ருதுராஜ் அணியில் சேர்க்கப்பட்டதையடுத்து, ருதுராஜ் - இஷான் கிஷன் ஆகிய 2 இளம் வீரர்களை ஓபனிங்கில் இறக்கிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா. ருதுராஜ் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 34 ரன்னிலும், ரோஹித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, 13.5 ஓவரில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடினர். 15 ஓவரில் இந்திய அணி 98 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் சூர்யகுமாரும் வெங்கடேஷும் இணைந்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 28 பந்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களை குவிக்க, கடைசி 5 ஓவரில் இந்திய அணிக்கு 86 ரன்கள் கிடைத்ததால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, 185 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.