நீண்டகால காதலியுடன் ஷர்துல் தாகூருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! டி20 உலக கோப்பைக்கு பின் திருமணம்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூருக்கும் அவரது நீண்டகால காதலிக்கும் நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது.
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர். இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஷர்துல் தாகூர், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக இதுவரை ஆடிவந்தார். அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அவரை சிஎஸ்கே அணி தக்கவைக்க வாய்ப்பில்லை. ஏலத்தில் வேண்டுமானால் மீண்டும் எடுக்கலாம்.
மிதவேகப்பந்து வீச்சாளராக மட்டுமே அறியப்பட்ட ஷர்துல் தாகூர், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அதன்பின்னர் தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக உருவெடுத்தார்.
இதையடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று ஆல்ரவுண்டர் எனுமளவிற்கு பேசப்பட்டார். பாண்டியாவிற்கு மாற்று ஆல்ரவுண்டராக இல்லை என்றாலும் கூட, ஷர்துல் தாகூர் நல்ல ஆல்ரவுண்டராக வளர்ந்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அவரது திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது. மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இன்று ஷர்துல் தாகூரின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஷர்துல் தாகூருக்கும் அவரது நீண்டகால காதலியான மித்தாலி பாருல்கருக்கும் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது. இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 75 பேர் மட்டும் கலந்துகொண்டனர்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு பின்னர், ஷர்துல் தாகூரின் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.