கடைசி நேரத்தில் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்த உமேஷ் யாதவ்.. ஆல் அவுட்டாகாமல் மரியாதையா டிக்ளேர் செய்த இந்திய அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் இரட்டை சதம், ரஹானேவின் சதம் மற்றும் கடைசி நேரத்தில் உமேஷ் யாதவின் காட்டடியால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வால் புஜாரா, கோலி ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 39 ரன்களுக்கே இழந்துவிட்டது. அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜோடி சேர்ந்த ரோஹித்தும் ரஹானேவும் அந்த பணியை செவ்வனே செய்தனர்.
முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டதால், இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்த ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக ஆடினர். முதல் நாளான நேற்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பின்னர், இரண்டாவது செசனில் இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். இருவருமே அடித்து ஆடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ரோஹித் சர்மா அரைசதத்திற்கு பிறகு அடி வெளுத்துவிட்டார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோஹித் சர்மா இரண்டாவது செசனிலேயே சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். டி பிரேக் முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. 58 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிய 32 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் மழை பெய்ய தொடங்கியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்திருந்தது. ரோஹித் 117 ரன்களுடனும் ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை நேற்று விட்ட இடத்திலிருந்தே, அதே ஃபார்முடன் தொடர்ந்தனர் ரோஹித்தும் ரஹானேவும். ரஹானே சதத்திற்கு தேவைப்பட்ட 17 ரன்களை எளிதாக எடுத்து சதத்தை விளாசினார். 3 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் சதமடித்த ரஹானே 115 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
ரோஹித்தும் ரஹானேவும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 267 ரன்களை குவித்தனர். இரட்டை சதமடித்த ரோஹித் சர்மா, அதன்பிறகு அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 212 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். சஹா 24 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஜடேஜா, அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே 51 ரன்களில் நடையை கட்டினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த உமேஷ் யாதவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
களத்திற்கு வந்ததும் முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்ட உமேஷ் யாதவ், அடுத்த பந்திலும் சிக்ஸர் அடித்தார். அதன்பின்னர் லிண்டே வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். மொத்தமாக 5 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்த உமேஷ் யாதவ் லிண்டேவின் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதற்கிடையே அஷ்வின் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ஷமியும் நதீமும் களத்தில் இருந்தபோது 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.