மகளிர் உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி
மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 107 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 244 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 52 ரன்கள் அடித்தார் மந்தனா. பின்வரிசையில் ஸ்னே ராணாவும் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பூஜா வஸ்ட்ராகர் 59 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களை குவித்தார். பின்வரிசையில் பூஜா மற்றும் ஸ்னே ராணா ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 244 ரன்கள் அடித்தது.
245 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் வீரராங்கனைகள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதனால் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் 43 ஓவரில் வெறும் 137 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி.
இதையடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.