செம பேட்டிங் ஆர்டர் தான்.. ஆனால் நோ யூஸ்.. இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி அணி அபார வெற்றி
தியோதர் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணியை 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார வெற்றி பெற்றது.
ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாபா அபரஜித் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். கெய்க்வாட் 113 ரன்களையும் அபரஜித் 101 ரன்களையும் குவித்தனர். கடைசி நேரத்தில் விஜய் சங்கர் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர் முடிவில் 302 ரன்களை குவித்தது இந்தியா பி அணி.
303 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷான், ஹனுமா விஹாரி, விஷ்ணு வினோத் என பல நல்ல வீரர்கள் இருந்தும் கூட, விஹாரியை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 194 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி மட்டுமே 59 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
இதையடுத்து 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி.