Asianet News TamilAsianet News Tamil

2வது இன்னிங்ஸில் 4 பேர் அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை அசால்ட்டா வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை வென்றுள்ளது. 

india a team beat west indies a in second unofficial test and won series
Author
West Indies, First Published Aug 4, 2019, 4:04 PM IST

இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி வென்றது.

இதையடுத்து அதிகாரப்பூர்வற்ற டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டி போட்டியிலும் வென்று டெஸ்ட் தொடரையும் வென்றது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி எஞ்சியுள்ள நிலையில், முதல் 2 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 318 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணியில் பிரியங்க பன்சால் மற்றும் ஷிவம் துபே மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் இந்தியா ஏ அணி 190 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 12 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சுனில் அம்ப்ரிஸும் ப்ளாக்வுட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.  இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க பவுலர்களே திணறிய நிலையில், ப்ளாக்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பார்ட் டைம் பவுலர் ஷிவம் துபே. அதன்பின்னர் அந்த அணி மீண்டும் மளமளவென விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

278 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் பிரியங்க் பன்சால் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 150 ரன்களை சேர்த்தனர். பன்சால் 68 ரன்களிலும் மயன்க் அகர்வால் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விஹாரி ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்திருந்தது. அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 93 ரன்கள் தேவை என்ற நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவருமே அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை. இருவருமே நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios