#AUSvsIND உங்களை சும்மா விட்றது இல்லடா..! களத்தில் இறங்கி அலசும் ஐசிசி
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் சிராஜின் மீது இனவெறியை உமிழ்ந்த ஆஸி., ரசிகர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஐசிசி தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வெறும் 244 ரன்கள் மட்டுமே அடித்தது.
94 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸி.,யின் கை ஓங்கியிருக்கிறது.
இந்த போட்டியின் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜை இன ரீதியாக சில ஆஸி., ரசிகர்கள் திட்டியுள்ளனர். இந்த போட்டியை காண வந்த பார்வையாளர்களில் சிலர் மது அருந்திவிட்டு, பும்ரா மற்றும் சிராஜை இனரீதியாக திட்டினர். ஆஸி., ரசிகர்கள் இனவெறியை உமிழும் சம்பவங்கள் இதற்கு முன்பும் பலமுறை அரங்கேறியிருக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கள நடுவர்களிடமும், போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அந்த ரசிகர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐசிசி தீவிரமாக இறங்கியுள்ளது. சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள சிசிடிவி வீடியோ பதிவுகளை சிட்னி கிரிக்கெட் ஸ்டேடிய ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் ஆராய்ந்துவரும் ஐசிசி, அவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்யும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இது மாதிரியான கீழ்த்தரமான விவகாரங்களில், சம்மந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இனிமேல் இப்படியான காரியங்களில் ஈடுபட மற்றவர்களுக்கு பயம் வரும்.