மன்னிப்புக்கெல்லாம் மசியாத ஐசிசி.. கெட்ட வார்த்தை பேசிய ஸ்டோக்ஸ் மீது அதிரடி நடவடிக்கை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ரசிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் அடுத்த 2 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக்கை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டி காக்கை தவிர அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 217 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசனை தொடங்கி இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் கை வெகுவாக ஓங்கியிருப்பதால் அந்த அணி வெற்றி பெறுவது உறுதி. இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தோற்பது உறுதியாகிவிட்டது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவுட்டாகிவிட்டு பெவிலியன் திரும்பிய பென் ஸ்டோக்ஸ், அவரை நக்கலடித்து அசிங்கப்படுத்திய ரசிகர் ஒருவரை பெவிலியனுக்கு செல்லும் வழியில், படியில் நின்று கொண்டு கெட்ட வார்த்தையில் திட்டினார். முடிந்தால் மைதானத்துக்கு வெளியே வந்து சொல்லுடா என்றவாறு கெட்ட வார்த்தையிலும் பேசினார். ஸ்டோக்ஸ் ரசிகரை திட்டியது, கேமராவில் பதிவானதால், அதிவேகமாக வைரலானது.
இதையடுத்து தனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட ஸ்டோக்ஸ். ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து என்னை கிண்டலடித்தும் கடுப்பேற்றும்படியாகவும் செய்தனர். எனவே நான் அவுட்டாகி செல்லும்போது கோபத்தில் திட்டிவிட்டேன். ஆனால் எனது செயல் தவறானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் பயன்படுத்திய தகாத வார்த்தைகளுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஏராளமான சிறுவர்கள் இந்த போட்டியை நேரலையில் காண்பார்கள். எனவே அவர்களுக்கு நான் பேசியது தவறான முன்னுதாரணமாகிவிடும். அதனால் நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், சிறப்பாகவும் கடும் போட்டியுடனும் சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், இந்த ஒரு செயலால் சீரழிந்துவிட வேண்டாம் என்று ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார்.
Also Read - தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு 3 முக்கியமான முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி
இந்நிலையில், தகாத வார்த்தையில் பேசிய பென் ஸ்டோக்ஸுக்கு 15% அபராதம் விதித்துள்ள ஐசிசி, அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளியையும் வழங்கியுள்ளது.