மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஒருநாள் உலக கோப்பையில் 14 அணிகள்..! ஐசிசியின் அதிரடி முடிவுகள்
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் கூடுதலாக 4 அணிகளை சேர்த்து 14 அணிகளை ஆடவைப்பது, சாம்பியன்ஸ் டிராபி தொடரை மீண்டும் நடத்துவது ஆகிய முடிவுகளை எடுத்துள்ளது ஐசிசி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) போர்டு மீட்டிங் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில், ஒருநாள் உலக கோப்பையில் 14 அணிகளை ஆடவைப்பது, சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் நடத்துவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை ஐசிசி எடுத்துள்ளது. அவற்றின் முழு விவரத்தை பார்ப்போம்.
ஐசிசி எடுத்த முடிவுகள்:
* இப்போது நடத்தப்பட்டும் வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடர்ந்து நடத்தப்படும். 9 டெஸ்ட் அணிகளும் தலா 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு 2 ஆண்டுகள் கழித்தும் ஃபைனல் மேட்ச் நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
* 2023ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் 10 அணிகள் மட்டுமே பங்குபெறும். 2027, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் உலக கோப்பை தொடர்களில் கூடுதலாக 4 அணிகளை சேர்த்து மொத்தம் 14 அணிகள் ஆடும். தலா 7 அணிகளை கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெறும். 2003 உலக கோப்பையை போல சூப்பர் சிக்ஸ் தொடர், அதன்பின்னர் அரையிறுதி என்ற ஃபார்மட்டில் நடத்தப்படும்.
* டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கும்.
* கடைசியாக 2017ல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.