என்ன ஆனாலும் பரவாயில்லை.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை பிளான் பண்ண மாதிரி நடத்தியே தீருவோம்..! ஐசிசி அதிரடி
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடத்தியே தீருவோம் என்று ஐசிசி உறுதியளித்துள்ளது.
ஐசிசி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது. 2019 ஆஷஸ் தொடரிலிருந்து கிரிக்கெட் அணிகள் ஆடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். அந்தவகையில், முதலிரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன.
இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், பிரிட்டனுக்குள் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் திட்டமிட்டபடி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடத்தப்படும் என்று ஐசிசி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.