இப்ப கிரிக்கெட் ஆட ஒரு அணியில் 9 பேர் போதும்..! புதிய விதியை அமல்படுத்தும் ஐசிசி
சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையில், ஒரு அணியில் அதிகமான வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், 9 வீராங்கனைகளுடன் களமிறங்கலாம் என்று ஐசிசி விதியை மாற்றியமைத்துள்ளது.
மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடக்கவுள்ளது. மார்ச் 4ம் தேதி தொடங்கும் மகளிர் உலக கோப்பை தொடர் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய 8 மகளிர் கிரிக்கெட் அணிகள் உலக கோப்பை தொடரில் ஆடுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும்.
லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஏப்ரல் 3ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐசிசி புதிய விதி ஒன்றை உருவாக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே அப்படி ஒரு அணியில் இடம்பெற்றுள்ள அதிகமான வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியால் கிரிக்கெட் ஆடமுடியாமல் போகும் சூழல் உருவாகும்.
அதற்கு தீர்வாக, ஒரு அணி அதிகபட்சம் 9 வீராங்கனைகளுடன் களமிறங்கி விளையாடலாம் என ஐசிசி விதியை உருவாக்கியுள்ளது. தேவை என்றால் அணியில் இருக்கும் 2 பெண்களை ஃபீல்டிங்கிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அவர்கள் பேட்டிங், பவுலிங் செய்யக்கூடாது.