IPL 2022: தம்பி உம்ரான் மாலிக், வெறும் வேகத்தை மட்டும் வச்சு ஒண்ணும் செய்யமுடியாது..! முகமது ஷமி அதிரடி
ஐபிஎல் 15வது சீசனில் அடையாளம் காணப்பட்ட சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் குறித்து முகமது ஷமி பேசியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் இளம் வீரர்கள் பலர் அசத்திவருகின்றனர். குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பலர் பட்டைய கிளப்பிவருகின்றனர். பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய சீனியர் பவுலர்கள் அசத்திவரும் அதேவேளையில், உம்ரான் மாலிக், யஷ் தயால், மோசின் கான், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசிவருகின்றனர்.
இவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவரும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் சற்று கூடுதல் ஸ்பெஷல். அதற்கு காரணம் அவரது வேகம். இந்த சீசனில் அதிவேக பந்தை அவர்தான் வீசியுள்ளார். டாப் 3 அதிவேக பந்துகளையும் அவர்தான் வீசியிருக்கிறார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு அவர் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் வீசிய பந்துதான் 2வது அதிவேக பந்து.
உம்ரான் மாலிக் அவரது லைன் & லெந்த்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கூடிய விரைவில் இந்தியாவிற்காக ஆடுவார் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்துகூறிவருகின்றனர்.
இந்நிலையில், உம்ரான் மாலிக் குறித்து பேசிய ஷமி, உம்ரான் மாலிக் நல்ல வேகமாக வீசுகிறார். ஆனால் என்னை பொறுத்தமட்டில், நான் வேகத்திற்கு பெரிய ரசிகன் கிடையாது. 140 கிமீ வேகத்தில் இரு பக்கமும் திருப்ப தெரிந்தால் போதும். பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுத்துவிடலாம். நல்ல வேகத்தில் வீசினாலும் சரியான லைன் & லெந்த்தை பிடித்து வீச போகப்போக கற்றுக்கொள்வார். ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று ஷமி தெரிவித்துள்ளார்.