IPL 2022: இந்த 2 இந்திய இளம் வீரர்கள் தான் ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போவார்கள்..! ஹர்ஷா போக்ளே ஆருடம்
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் எந்த 2 இந்திய வீரர்கள் அதிகமான தொகைக்கு விலைபோவார்கள் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது.
அதற்கு முன்பாக பழைய அணிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளது. 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக தலா 3 வீரர்களை எடுத்துள்ளது.
மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுப்பது என்பது குறித்து அனைத்து அணிகளும் தீவிரமாக ஆலோசித்து மும்முரமாக ஏலத்திற்கு தயாராகிவருகின்றன.
இந்த சீசனில் வார்னர் மாதிரியான பெரிய வீரர்களும், இஷான் கிஷன் மாதிரியான இளம் அதிரடி வீரர்களும் என பல சிறந்த வீரர்கள் ஏலத்தில் இடம்பெறுகின்றனர். எனவே ஏலம் மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும். மெகா ஏலத்தில் 1214 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த மெகா ஏலத்தில் எந்த 2 இந்திய வீரர்கள் அதிகமான தொகைக்கு விலைபோவார்கள் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஹர்ஷா போக்ளே, இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பர் - இந்திய வீரர் ஆகிய 3 பாக்ஸ்களையும் டிக் அடிக்கும் இஷான் கிஷன் கண்டிப்பாக பெரிய தொகைக்கு விலைபோவார் என்று ஹர்ஷா போக்ளே கணித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்த இஷான் கிஷனை, அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் மும்பை அணி தக்கவைக்கவில்லை. ஆனால் எவ்வளவு தொகை கொடுத்தாயினும் அவரை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் மும்பை அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக தொகைக்கு விலைபோகும் அடுத்த வீரராக தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, ஷாருக்கானிடம் ஸ்பார்க் உள்ளது. அவர் கண்டிப்பாக இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோவார். ஷாருக்கான் பேட்டிங் யூசுஃப் பதானின் சாயலில் உள்ளாது. யூசுஃப் பதானை போல அதிரடியாக பேட்டிங் ஆடுகிறார் ஷாருக்கான் என்று ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
ஐந்தே கால் கோடி ரூபாய்க்கு ஷாருக்கானை ஏலத்தில் எடுத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, அவரை மெகா ஏலத்திற்கு முன் விடுவித்தது. ஆனால் ஒரு ஃபினிஷராக அவரை மீண்டும் எடுக்க கண்டிப்பாக அந்த அணி முயற்சி செய்யும்.