India vs South Africa: இந்திய டெஸ்ட் அணியில் இனிமேல் அவர் ஆட சான்ஸே இல்ல..! தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அஜிங்க்யா ரஹானே ஆட வாய்ப்பே இல்லை என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தார், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்தார். இந்திய அணிக்காக 78 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஜிங்க்யா ரஹானே, 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 4756 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி ஆடாத போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பிவிட, அந்த தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றவர் ரஹானே.
ஆனால் அண்மைக்காலமாக படுமோசமாக பேட்டிங் ஆடிவரும் அஜிங்க்யா ரஹானே மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவரது மோசமான ஃபார்மின் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்தன. கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ரஹானே அடித்த ரன்கள்: 4, 37, 24, 1, 0, 67, 10, 7, 27, 49, 15, 5, 1, 61, 18, 10, 14, 0, 35, 4.
ரஹானே கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வெறும் இரண்டே அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதையும் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலேயே அவரை சேர்க்க வேண்டாம் என்ற கருத்து இருந்தது. ஆனால் கோலி ஆடாததால், அவர் தான் கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதால், அவர் ஆடவைக்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியிலும் 35 மற்றும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.
அவர் சொதப்பிய அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமும் அரைசதமும் அடித்தார். ஹனுமா விஹாரியும் இருக்கிறார். அவரும் வந்தால் டெஸ்ட் அணியில் வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக உள்ளது.
ரஹானே இவ்வளவு காலம் இந்திய அணியில் ஆடுவதற்கு காரணமே அவர் கேப்டன்சி இடத்தில் இருக்கிறார் என்பதுதான் காரணம் என்று கம்பீர் கூறியிருந்தார். இந்நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றூப்பயணத்துக்கான துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுளார். இதன்மூலம் இனிமேல் டெஸ்ட் அணியில் ரஹானேவிற்கென்று ஒரு நிரந்தர இடம் இல்லை என்பது தெரியப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், ரஹானே குறித்து பேசிய கம்பீர், ரஹானேவிற்கு இனிமேல் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம். அவர் தொடக்க வீரரும் கிடையாது. எனவே அவருக்கு இனிமேல் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடியிருக்கிறார். அண்மைக்கால ஃபார்மின் அடிப்படியில் அவருக்குத்தான் அணியில் இடம் கிடைக்கும். இந்திய அணியாலோ அல்லது கேப்டனாலோ அவரை நீக்கமுடியாது. ஹனுமா விஹாரியும் சிறப்பாக ஆடியிருக்கிறார். எனவே ரஹானேவிற்கு இனிமேல் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கம்பீர் கூறியிருக்கிறார்.