ODI-ல் ஆடுமளவிற்கு அந்த பையனுக்கு மெச்சூரிட்டி பத்தாது; அவனை திருப்பி அனுப்புங்க! இளம் வீரரை விரட்டும் கம்பீர்
வெங்கடேஷ் ஐயருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கு பக்குவமில்லை என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி. 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் தான் பெரும் பின்னடைவாகவும், தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் இந்திய அணியில் ஆட முடியவில்லை. எனவே 6வது பவுலிங் ஆப்சன் தேவை என்ற காரணத்திற்காக ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக டாப் ஆர்டரில் நன்றாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், டி20 அணியில் ஏற்கனவே இடம்பிடித்த நிலையில், அதற்குள்ளாக நேரடியாக ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு அவர் சோபிக்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பே கிடைக்கவில்லை. 2வது போட்டியில் பேட்டிங்கில் 28 ரன்கள் அடித்த வெங்கடேஷ் ஐயர், 5 ஓவர்கள் பந்துவீசினார். ஆனால் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இதையடுத்து 3வது ஒருநாள் போட்டியில் அவர் நீக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு, ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இல்லாததுதான் இந்திய அணியின் பேலன்ஸை பாதித்துவிட்டதாகவும், அதுவே தோல்விக்கு காரணம் என்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.
அவர்கள் வந்துவிட்டால் வெங்கடேஷ் ஐயருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், டி20 கிரிக்கெட்டில் மட்டுமே வெங்கடேஷ் ஐயர் ஆடவைக்கப்பட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கு அவர் பக்குவப்படவில்லை. வெறும் 7-8 ஐபிஎல் போட்டிகளில் அவரது ஆட்டத்தை பார்த்துவிட்டு நேரடியாக ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுப்பது சரியல்ல. ஐபிஎல் அடிப்படையில் அவரை எடுப்பதென்றால், அவர் ஐபிஎல்லில் ஆடும் அணியிடம், அவரை மிடில் ஆர்டரில் இறக்கிவிட சொல்ல வேண்டும். ஆனால் என்னை பொறுத்தமட்டில் அவரை வெறும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடவைப்பது நல்லது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.