ஐபிஎல் 16வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 189 ரன்கள் அடித்து, 190 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது.  

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டுப்ளெசிஸ், மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். இதையடுத்து இறக்கப்பட்ட ஷபாஸ் அகமது 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். 

3வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் - டுப்ளெசிஸ் இணைந்து 117 ரன்களை குவித்தனர். டுப்ளெசிஸ் 39 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 44 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அவுட்டாகாமல் இருந்திருந்தால் சதமடித்திருக்கலாம். சதத்தை தவறவிட்டுவிட்டார்.

15வது ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தபோது, ஆர்சிபி அணியின் ஸ்கோர் 156 ரன்கள் ஆகும். அவர் அவுட்டான பின் அனைத்து வீரர்களும் சொதப்பியதால் கடைசி 5 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே அடித்தது ஆர்சிபி அணி. அதனால் 20 ஓவரில் 189 ரன்கள் மட்டுமே ஆர்சிபியால் அடிக்க முடிந்தது. கடைசி 5 ஓவரில் பின்வரிசை வீரர்கள் அடித்து ஆடியிருந்தால் ஆர்சிபி அணி மெகா ஸ்கோரை அடித்திருக்கலாம். 190 ரன்கள் என்பது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அடிக்கக்கூடிய இலக்கே ஆகும்.