#ENGvsIND மிரட்டலாக தொடங்கிய பும்ரா.. பிரேக் கொடுத்த சிராஜ்..! முதல் நாள் முதல் செசனில் அசத்திய இந்தியா
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாட்டிங்காமில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி ஷமி, பும்ரா, சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர் ஜடேஜா என 5 பவுலர்களுடன் களமிறங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டோமினிக் சிப்ளியும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. இதையடுத்து சிப்ளியுடன் ஜோடி சேர்ந்து ஜாக் க்ராவ்லி, அருமையாக ஆடினார்.
சிப்ளியும் க்ராவ்லியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 42 ரன்களை சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்காக இந்திய அணி காத்திருந்த நிலையில், க்ராவ்லியை 27 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சிராஜ்.
இதையடுத்து சிப்ளியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர, முதல் செசன் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்திருந்தது. 2வது செசன் 2 அணிகளுக்குமே மிக முக்கியம்.