முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார்..! ஸ்டோக்ஸை வீழ்த்தி பிரேக் கொடுத்த நடராஜன்
கடைசி ஒருநாள் போட்டியில் 330 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தி புவனேஷ்வர் குமார் அசத்திய நிலையில், ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் பிரேக் கொடுத்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி புனேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தவான்(67), ரிஷப் பண்ட்(78) மற்றும் ஹர்திக் பாண்டியாவின்(64) அதிரடி அரைசதங்களால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 39வது ஓவரில் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் ஸ்கோர் 265 ரன்கள். பாண்டியா ஆட்டமிழந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. பாண்டியா கடைசி வரை ஆடியிருந்தால் இந்திய அணி மெகா ஸ்கோரை அடித்திருக்கும்.
இதையடுத்து 330 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களை விளாசினார். ஆனால் அதற்கு பதிலடியாக அந்த ஓவரின் கடைசி பந்திலேயே ராயை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.
அதன்பின்னர் பேர்ஸ்டோவையும் ஒரு ரன்னில் புவனேஷ்வர் குமார் வீழ்த்த 28 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்ததுமே அவரை வீழ்த்தும் வாய்ப்பை புவனேஷ்வர் குமார் ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் எளிமையான அந்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியா கோட்டைவிட, அதன்பின்னர் ஒருசில பவுண்டரிகளை விளாசிய ஸ்டோக்ஸை நிலைக்கவிடாமல் 35 ரன்னில் நடராஜன் வீழ்த்த, பட்லரை 15 ரன்னில் ஷர்துல் தாகூர் வெளியேற்றினார்.
95 ரன்னில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் மாலனும் லிவிங்ஸ்டனும் இணைந்து ஆடிவருகின்றனர்.