Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND முதல் 2 ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா, ஷமி..! ஈசி கேட்ச்சை கோட்டைவிட்ட ரோஹித்

2வது டெஸ்ட்டில் 272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் முதல் 2 ஓவர்களில் டக் அவுட்டாக்கி அனுப்பினர் பும்ராவும் ஷமியும். இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. 
 

england lost 2 early wickets in while chasing target of 272 runs in second test
Author
London, First Published Aug 16, 2021, 7:22 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணி 391 ரன்கள் அடித்தது.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை 4ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(5) மற்றும் ரோஹித்(21) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கோலியும் 20 ரன்களில் வெளியேற இந்திய அணி 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் சீனியர் வீரர்களான ரஹானேவும் புஜாராவும் இணைந்து அனுபவத்தை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து அருமையாக ஆடி 100 ரன்களை சேர்த்து கொடுத்தனர். சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி இந்திய அணியை மோசமான நிலையிலிருந்து காப்பாற்றினர். புஜாரா 45 ரன்னில் ஆட்டமிழக்க, ரஹானே 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட்டும் இஷாந்த் சர்மாவும் களத்தில் இருந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், இன்றைய ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே 22 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து இஷாந்த் சர்மாவும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

209 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஷமியும் பும்ராவும் இணைந்து அருமையாக ஆடி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்களை குவித்தனர். ஷமி - பும்ரா ஜோடியை கடைசிவரை இங்கிலாந்து அணியால் பிரிக்கவே முடியவில்லை. உணவு இடைவேளைக்கு பிறகு ஒன்றரை ஓவர் ஆடிய பின்னர், 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

 இதையடுத்து 60 ஓவரில் 272 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரரான டோமினிக் சிப்ளியை டக் அவுட்டாக்கினார் ஷமி.

பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய பும்ராவும் ஷமியும் பவுலிங்கிலும் பட்டையை கிளப்பினர். இதையடுத்து 6வது ஓவரில் ஹசீப் ஹமீதை வீழ்த்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் ஷமி. 6வது ஓவரின் 2வது பந்தில் ஷமியின் பவுலிங்கில் அவுட்சைட் எட்ஜ் ஆகி சென்ற கேட்ச்சை, 2வது ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா தவறவிட்டார். அந்த கேட்ச்சை பிடித்திருந்தால், 3வது விக்கெட்டையும் இங்கிலாந்து இழந்திருக்கும். ஆனால் ரோஹித் கேட்ச்சை கோட்டைவிட்டதால், ஹசீப் ஹமீதும் ரூட்டும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios