#ENGvsPAK கடைசி டி20யிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற இங்கிலாந்து..! படுதோல்விகளுடன் நாடு திரும்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என டி20 தொடரை வென்றது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து அணி.
இதையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2வது போட்டியில் தோல்வியடைந்தது. 1-1 என தொடர் சமனடைந்த நிலையில், கடைசி டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது.
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 76 ரன்கள் விளாசி கடைசிவரை களத்தில் நின்றார். ரிஸ்வான் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அவருக்கு எந்த வீரருமே ஒத்துழைப்பு கொடுக்காமல் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டே இருந்தனர்.
ரிஸ்வான் நன்றாக ஆடினாலும், அவருக்கு மறுமுனையில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.
இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 64 ரன்களை விரைவாக சேர்த்து கொடுத்தார். அதனால், அதன்பின்னர் வந்த எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சிறு சிறு பங்களிப்பு அளித்தாலும், அந்த அணியால் இலக்கை எட்டி வெற்றி பெற முடிந்தது.
கடைசி ஓவரில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என டி20 தொடரையும் வென்றது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களையும் இழந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது.