பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயித்த 337 ரன்கள் என்ற கடின இலக்கை 44வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 336 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்(4), ரோஹித் சர்மா(25) ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க, கேப்டன் கோலியும் 4ம் வரிசையில் இறங்கிய ராகுலும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். பொறுப்புடன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கோலி 79 பந்தில் 66 ரன்களுக்கு அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழந்தார்.

கோலி ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 32 ஓவருக்கு 158 ரன்கள். அதன்பின்னர் ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ராகுல் அரைசதம் அடிக்க, 40வது ஓவரை நெருங்கியபோது, ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அடித்து ஆட தொடங்கினர்.

ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ராகுல் சதமடிக்க, ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். சதமடித்த ராகுல், 108 ரன்னில் டாம் கரனின் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்த முதல் பந்தே சிக்ஸருக்கு விளாசி மிரட்டினார். அவருடன் இணைந்து ரிஷப் பண்ட்டும் சிக்ஸர் மழை பொழிய அணியின் ஸ்கோர் மேலும் வேகமாக உயர்ந்தது.

அதிரடியாக ஆடி ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய ரிஷப் பண்ட், 40 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியா 16 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடிக்க, இந்திய அணி 50 ஓவரில் 336 ரன்களை குவித்து 337 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி

337 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் வழக்கம்போலவே சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ராய் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ராயும் பேர்ஸ்டோவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 16 ஓவரில் 110 ரன்களை குவித்தது.

பேர்ஸ்டோவும் அரைசதம் அடிக்க, அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், களத்தில் நிலைக்க நேரம் எடுத்துக்கொண்டாலும், நிலைத்த பின்னர் அடித்து ஆடி தெறிக்கவிட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ, சதமடிக்க, ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த பின்னர், குல்தீப் யாதவ், க்ருணல் பாண்டியா பவுலிங்கில் ஓவருக்கு 3 சிக்ஸர் வீதம் சிக்ஸர் மழை பொழிந்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் ஆடியபோது, 40 ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்து வெற்றி பெறும் சூழல் இருந்தது.

ஆனால் 36வது ஓவரில் பென் ஸ்டோக்ஸை 99 ரன்னில் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவை 124 ரன்னில் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா, அதே ஓவரில் பட்லரை டக் அவுட்டாக்கினார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிதாக இறங்கிய லிவிங்ஸ்டன் மற்றும் மாலன் ஆகிய இருவரும் கவனமாக ஆட வேண்டியிருந்ததால், நிதானமாக ஆடி 44வது ஓவரில் இலக்கை எட்டவைத்தனர். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இதையடுத்து ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. வரும் 28ம் தேதி நடக்கும் கடைசி போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டி.