Ruturaj Gaikwad: பையன் சும்மா தெறிக்கவிடுறான்.. உடனே டீம்ல எடுங்க..! 28 வயசுல எடுத்து எந்த பிரயோஜனமும் இல்ல
நல்ல ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் அணியில் எடுக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணி தேர்வாளர்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய இளம் வீரர்கள் இன்பமான தலைவலியை கொடுத்துவருகின்றனர். ஐபிஎல், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் என தொடர்ச்சியாக ஸ்கோர் செய்துவரும் அவர்கள், தங்களை இந்திய அணியில் புறக்கணிக்கமுடியாத அளவிற்கு ஆடிவருகின்றனர்.
ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக ஆடி அதிகமான ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை வென்ற ருதுராஜ் கெய்க்வாட், அதே ஃபார்மை விஜய் ஹசாரே தொடரிலும் தொடர்ந்துவருகிறார். விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக 136 ரன்களை குவித்து மகாராஷ்டிராவை வெற்றி பெற செய்த ருதுராஜ், 2வது போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 154 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து கொடுத்தார். கேரள அணிக்கு எதிரான போட்டியிலும் 124 ரன்களை குவித்து ஹாட்ரிக் சதமடித்தார்.
தொடர்ச்சியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ருதுராஜ் கெய்க்வாட்டை, அவர் நல்ல ஃபார்மில் இருக்கும் இந்த சமயத்திலேயே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது. அந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 24 வயதான ருதுராஜ் கெய்க்வாட்டை எடுக்க வேண்டும் என்று வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய திலீப் வெங்சர்க்கார், ஃபார்மில் இருக்கும் வீரரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும். ருதுராஜ் அவரது திறமையை நிரூபிக்க இன்னும் எவ்வளவு ரன் தான் அடிக்க வேண்டும்? தேர்வாளர்கள் ருதுராஜை நேரடியாக இந்திய அணியில் எடுக்க சரியான நேரம் இதுதான். ருதுராஜ் 3ம் வரிசையிலும் பேட்டிங் ஆடவல்லவர். அவருக்கு இப்போது வயது 24. இப்போது இந்திய அணியில் எடுக்காமல், அவரை 28 வயதில் எடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜை எடுக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.