#IPL2021 ஆர்சிபி அணியின் முக்கியமான வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்..!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா என்பதால் அவர் குவாரண்டினில் உள்ளார்.
ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் நடக்கிறது. அகமதாபாத்தை தவிர மற்ற 5 நகரங்களில் லீக் போட்டிகள் நடப்பதால், அனைத்து அணிகளும் முதல் போட்டியில் ஆடும் ஊர்களில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டுவருகின்றன.
இதற்கிடையே, ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள், அணி நிர்வாகிகள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா, மும்பை மைதான ஊழியர்கள் சிலர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அக்ஸர் படேல், சிஎஸ்கே அணியின் சமூக ஊடக நிர்வாகி என பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததால் அவர்கள் குவாரண்டினில் உள்ளனர்.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணிக்காக கடந்த சீசனில் அபாரமாக ஆடி அறிமுக சீசனிலேயே 473 ரன்களை குவித்து, கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ஆர்சிபி வீரர் என்ற பெருமையை பெற்றார் தேவ்தத் படிக்கல்.
அதன்பின்னர் உள்நாட்டு போட்டிகளிலும் அபாரமாக ஆடி இந்த சீசனை எதிர்நோக்கியிருந்தார் தேவ்தத் படிக்கல். ஆர்சிபி அணி சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் படிக்கல் மட்டும் இன்னும் பெங்களூரிலேயே உள்ளார்.
இந்நிலையில், தேவ்தத் படிக்கல்லுக்கு மார்ச் 22ம் தேதியே கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததாகவும், அதனால் அவர் இன்னும் குவாரண்டினில் இருப்பதாகவும், ஆர்சிபி அணியின் மருத்துவ குழு அவரை கண்காணித்துவருவதாகவும், பிசிஆர் டெஸ்ட்டில் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததும், அவர் ஆர்சிபி அணியுடன் இணைவார் என்றும் ஆர்சிபி அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.