கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 215 ரன்களை குவித்து 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

கேகேஆர் அணி:

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ராசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா வழக்கம்போலவே தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். வார்னரும் அடித்து ஆட, டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பிரித்வி ஷா - டேவிட் வார்னரின் அதிரடியால் பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை குவித்தது.

அடித்து ஆடிய பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடித்தார். 29 பந்தில் 51 ரன்கள் அடித்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 14 பந்தில்27 ரன்கள் அடித்து சிறிய கேமியோ ரோல் ப்ளே செய்த ரிஷப் பண்ட்டும் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டேவிட் வார்னர், 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லலித் யாதவ்(1) மற்றும் ரோவ்மன் பவல் (8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.

ஆனால் ஷர்துல் தாகூர் கடைசி 2 ஓவர்களில் சிக்ஸர்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். உமேஷ் யாதவ் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய உமேஷ் யாதவ், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். அக்ஸர் படேலும் அவர் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 215 ரன்களை குவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது. ஷர்துல் தாகூர் 11 பந்தில் 29 ரன்களை விளாசினார்.