ஐபிஎல் 14வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து, 136 ரன்கள் என்ற இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் சிஎஸ்கேவை எந்த அணி எதிர்கொள்ளப்போகிறது என்பதை தீர்மானிக்கும், 2வது தகுதிச்சுற்று போட்டி ஷார்ஜாவில் இன்று நடந்துவருகிறது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, வழக்கம்போலவே அவரது இயல்பான அதிரடி ஆட்டத்துடன் தொடங்கினார். அடித்து ஆடி 12 பந்தில் 18 ரன்கள் அடித்த பிரித்வி ஷாவை, தனது முதல் பந்தில் வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி.

3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரை இறக்காமல், புதிய முயற்சியாக மார்கஸ் ஸ்டோய்னிஸை இறக்கிவிட்டது டெல்லி அணி. இது தேவையற்ற முயற்சியாக மாறியதுடன், ஒட்டுமொத்த டெல்லி கேபிடள்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரையும் சிதைத்து, பேட்டிங்கையும் கெடுத்துவிட்டது.

பேட்டிங் ஆடுவதற்கு சவாலான ஷார்ஜா பிட்ச்சில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிய ஸ்டோய்னிஸ் 23 பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தவானும் 36 ரன்னில் ஆட்டமிழக்க, சுனில் நரைன், வருண், ஷிவம் மாவி, ஃபெர்குசன் ஆகிய கேகேஆர் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி டெல்லி அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். 

ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் கடைசி வரை நின்று பேட்டிங் ஆடி 27 பந்தில் 30 ரன்கள் அடித்து 20 ஓவரில் 135 ரன்களை எட்ட உதவினார். ஹெட்மயர் அவரது பங்கிற்கு 10 பந்தில் 17 ரன்கள் அடித்தார்.

136 ரன்கள் என்ற இலக்கை கேகேஆர் அணி விரட்டிவருகிறது. பேட்டிங்கிற்கு சவாலான ஷார்ஜா பிட்ச்சில் 136 ரன்கள் என்பது சவாலான இலக்கே.