#SLvsIND எல்லாப் புகழும் ராகுல் சாருக்கே - மேட்ச் வின்னர் தீபக் சாஹர்
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், மேட்ச் வின்னிங் பேட்டிங் ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்த தீபக் சாஹர், தனக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரைதான் உதவியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 275 ரன்கள் அடித்தது.
இலங்கை அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(50), அசலங்கா(65) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அவர்களைத்தவிர, பானுகா(36), தனஞ்செயா டி சில்வா(32), சாமிகா கருணரத்னே(44) ஆகியோரும் நன்றாக ஆடினர். 50 ஓவரில் 275 ரன்கள் அடித்தது இலங்கை அணி.
276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் பிரித்வி ஷா(13), ஷிகர் தவான்(29), இஷான் கிஷன்(1), மனீஷ் பாண்டே(37), ஹர்திக் பாண்டியா(0) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, இந்திய அணி 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவும் 53 ரன்களுக்கு வெளியேற, இந்திய அணியின் நிலைமை மோசமடைந்தது. தீபக் சாஹரும் க்ருணல் பாண்டியாவும் இணைந்து நன்றாக ஆடிய நிலையில், க்ருணல் பாண்டியா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 193 ரன்கள் அடித்திருந்த நிலையில், 36வது ஓவரின் முதல் பந்தில் க்ருணல் பாண்டியா 7வது விக்கெட்டாக ஆட்டமிழந்த நிலையில், அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து பொறுப்புடன் ஆடிய தீபக் சாஹர், இலங்கை பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். அவருக்கு புவனேஷ்வர் குமாரும் ஒத்துழைப்பு கொடுக்க, பொறுப்புடன் ஆடிய தீபக் சாஹர் கடைசி வரை களத்தில் நின்று தனது பணியை செவ்வனே செய்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.
69 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்த தீபக் சாஹர், பவுலிங்கிலும் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்திய அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்த தீபக் சாஹர், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் மேட்ச் வின்னர் தீபக் சாஹர், நான் களத்திற்குள் செல்லும்போது என் மனதில் ஒன்றே ஒன்றுதான் ஓடிக்கொண்டிருந்தது. நாட்டுக்காக வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்ப்பை கிடைக்கும் இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே சிறப்பாக ஆட வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது.
ராகுல் சார் அனைத்து பந்துகளையும் என்னை ஆடச்சொன்னார். ராகுல் சாரின் பயிற்சியில் இந்தியா ஏ அணிக்காக நிறைய ஆடியிருக்கிறேன். அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். என் மீது ராகுல் சார் வைத்த நம்பிக்கை தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.