இந்திய அணியை அவமரியாதை செய்கிறார் ரணதுங்கா..! இந்திய முன்னாள் வீரர் கடும் தாக்கு
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை 2ம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் கருத்து இந்திய அணியை அவமரியாதை செய்யும் விதமாக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.
ரணதுங்காவின் விமர்சனத்துக்கு, அப்படியெல்லாம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியமே விளக்கமளித்திருந்தது. ஆகாஷ் சோப்ராவும் ரணதுங்காவிற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்திய முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதியும் இதுகுறித்து கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில், ரணதுங்காவின் கருத்து குறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, ரணதுங்காவின் அந்த குறிப்பிட்ட கருத்து சரியானது அல்ல. டாப் வீரர்களான விராட், ரோஹித், பும்ரா, பண்ட் ஆகியோர் இலங்கைக்கு செல்லவில்லை என்பது சரிதான். அவர்கள் இல்லாவிட்டாலும் கூட, இந்தியாவிற்காக ஆட இலங்கை சென்றுள்ள நிறைய வீரர்கள் ஏற்கனவே இந்தியாவிற்காக ஆடிய வீரர்கள் தான். இந்தியாவிற்காக ஆட சென்றுள்ள அணியை பி அணி என்று கூறுவது அவமரியாதை செய்வதாகும். அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்காமல் இழிவுபடுத்துவதாகும். வருண் சக்கரவர்த்தி மாதிரியான ஒருசில வீரர்களை தவிர மற்ற அனைவருமே ஏற்கனவே இந்தியாவிற்காக ஆடியவர்கள் தான் என்று தீப்தாஸ் குப்தா கூறியுள்ளார்.