#ICCWTC ஃபைனல்: இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி ஆட வேண்டும்..? முன்னாள் தேர்வாளர் அறிவுரை
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா ஆலோசனை கூறியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் சமபலம் வாய்ந்த இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. அதனால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும். பின்வரிசையில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி முக்கியமான ரன்களை விரைவாக குவித்துக்கொடுக்க வல்லவர். ஆனால் ரோஹித்தும் கோலியும் சிறப்பாக ஆடுவது அவசியம். குறிப்பாக தொடக்க வீரர் ரோஹித் சர்மா தான் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும்.
இந்நிலையில், இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பது குறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, இந்திய பேட்ஸ்மேன்கள் சிந்தனையில் தெளிவாக இருக்கவேண்டும். பொதுவாக அனைவரும், பேட்ஸ்மேன்கள் அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆட அறிவுறுத்துவார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். வீரர்கள் அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆடவேண்டும். ரோஹித் சர்மா புல் ஷாட், கட் ஷாட்டுகளை நன்றாக ஆடுவார். அதற்காக அவர் அனைத்து பந்தையும் அடித்து ஆட வேண்டுமென்பதில்லை.
பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கு ஏற்ற ஸ்லாட்டில் பந்து விழும்போது அடித்து ஆடவேண்டும். ரோஹித் சர்மா புல் ஷாட், கட் ஷாட் ஆட ஏற்ற பந்து கிடைத்தால் அடித்து ஆடலாம். எல்லா பந்தையும் அடித்து ஆடக்கூடாது. வீரர்கள் அவர்களது ஸ்லாட்டில் பந்து விழுந்தால் மட்டுமே அடித்து ஆடவேண்டும். இதை வீரர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.