சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆடுவதை விட பெரிய உத்வேகம் தனக்கு தேவையில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது. தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக வெறித்தனமாக பேட்டிங் ஆடிய வார்னர் 58 பந்தில் 92 ரன்களை குவித்தார். ரோவ்மன் பவலும் அதிரடி அரைசதம் அடித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வார்னர் மற்றும் பவலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 207 ரன்களை குவித்த டெல்லி அணி, சன்ரைசர்ஸை 186 ரன்களுக்கு சுருட்டி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 2016ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து, அந்த அணியின் மேட்ச் வின்னராகவும் கேப்டனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை செய்த வார்னரை கடந்த சீசனில் ஆடும் லெவனில் கூட சேர்க்காமல் உட்காரவைத்து அசிங்கப்படுத்தியது சன்ரைசர்ஸ் அணி. அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அவரை உட்காரவைத்தது. வார்னர் மாதிரியான தலைசிறந்த பேட்ஸ்மேனுக்கு ஃபார்ம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதை உணராமல் அவரை பென்ச்சில் உட்காரவைத்து அசிங்கப்படுத்தியது சன்ரைசர்ஸ் அணி.

அந்த அணியிலிருந்து விலகி மெகா ஏலத்தில் கலந்துகொண்ட வார்னரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. டெல்லியும் சன்ரைசர்ஸும் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸுக்கு எதிராக வார்னர் எப்படி ஆடுகிறார் என்பதை பார்க்க பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்தைப் போலவே, சன்ரைசர்ஸுக்கு எதிராக ஸ்பெஷலான இன்னிங்ஸ் ஆடினார் வார்னர். இன்னிங்ஸின் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடிய வார்னர், கிட்டத்தட்ட சதத்தை நெருங்கிவிட்டார். கடைசி வரை களத்தில் இருந்தும், பவல் கடைசி ஓவரை அடித்து ஆடியதால், ஸ்டிரைக் கிடைக்காததால் வார்னரால் சதம் அடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், சன்ரைசர்ஸுக்கு எதிராக அதிரடியாக பேட்டிங் ஆடியது குறித்து பேசிய டேவிட் வார்னர், சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆடுவதைவிட பெரிய உத்வேகம் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். எனவே சன்ரைசர்ஸுக்கு எதிரான வெற்றி சிறப்பானது என்று டேவிட் வார்னர் தெரிவித்தார்.