லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்து, 211 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
சிஎஸ்கே அணி 3 மாற்றங்களுடனும், லக்னோ அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கியது.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, ட்வைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, துஷ்மந்தா சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான சீனியர் வீரர் ராபின் உத்தப்பா, விண்டேஜ் உத்தப்பாவாக மாறி அடி வெளுத்துவாங்கினார். உத்தப்பா அடித்து ஆடி 27 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி 22 பந்தில் 35 ரன்கள் அடித்தார். ஷிவம் துபே அதிரடியாக பேட்டிங் ஆடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். 30 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.
ஷிவம் துபே ஆட்டமிழந்த பிறகு 19வது ஓவரின் 3வது பந்தில் களத்திற்கு வந்த தோனி, முதல் பந்தே சிக்ஸர் அடித்தார். அடுத்ததாக ஒரு பவுண்டரி அடித்த தோனி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து முடித்தார். 6 பந்தில் தோனி 16 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 20 ஓவரில் 210 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
