#INDvsENG ரசிகர்களை மட்டுமல்ல; வீரர்களையும் வியக்கவைத்த ஜோர்டானின் மிரட்டலான கேட்ச்..! வைரல் வீடியோ
கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் கேட்ச்சை பவுண்டரி லைனில் ஒற்றை கையில் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கிறிஸ் ஜோர்டான்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. அந்த போட்டியில் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-2 என தொடரை வென்றது.
கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் நான்கே பேட்ஸ்மேன்கள் தான் பேட்டிங் ஆடினர். ஆனால் அவர்கள் அனைவருமே அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர்களாக இறங்கிய ரோஹித் 64 ரன்களும், கோலி 80 ரன்களும் குவித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 39 ரன்களும் குவித்தனர். அதனால் 20 ஓவரில் 224 ரன்களை குவித்த இந்திய அணி, 188 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவை, கிறிஸ் ஜோர்டான் அபாரமான கேட்ச்சை பிடித்து களத்திலிருந்து வெளியேற்றினார். அடில் ரஷீத் வீசிய 14வது ஓவரின் 2வது பந்தை டீப் மிட் விக்கெட் திசைக்கும் லாங் ஆனுக்கும் இடையே தூக்கியடித்தார் சூர்யகுமார் யாதவ்.
சிக்ஸருக்கு சென்றிருக்க வேண்டிய அந்த பந்தை லாங் ஆனில் இருந்து ஓடிவந்த கிறிஸ் ஜோர்டான் ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். ஆனால் ரன்னிங்கிலேயே பிடித்ததால், பேலன்ஸ் மிஸ் ஆகி பவுண்டரி லைனுக்குள் செல்ல நேர்ந்ததால், அதற்கு முன்பாக, மறுபக்கத்திலிருந்து அந்த பந்தை பிடிக்க ஓடிவந்து, தன் முன் நின்ற மற்றொரு ஃபீல்டரான ஜேசன் ராயிடம் தூக்கிப்போட்டுவிட்டு பவுண்டரி லைனுக்குள் ஓடினார் ஜோர்டான்.
ஜோர்டான் தூக்கிப்போட்டதை ராய் பிடிக்க, சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். ஜேசன் ராயே ஜோர்டான் கேட்ச்சை பிடித்தவிதத்தை கண்டு, வியந்ததுடன், ஒரு வழியாக கேட்ச்சை பிடித்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டார். அந்த கேட்ச்சை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்துவருகின்றனர். ரசிகர்களை மட்டுமல்லாது சக வீரர்களையும் வியக்கவைத்தது ஜோர்டானின் கேட்ச்.