Asianet News TamilAsianet News Tamil

ஏமாத்திய விக்ராந்த், நான் இருக்கேன் பாஸுன்னு காட்டிய சாந்தனு – பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற சென்னை ரைனோஸ்!

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் சென்னை ரைனோஸ் அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Chennai Rhinos entered into play off match after beat Kerala Strikers by 9 Wickets Difference in CCL 2024 Season 10 rsk
Author
First Published Mar 11, 2024, 9:15 AM IST

ஒவ்வொரு ஆண்டும் நடிகர்களுக்கு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதன் முதலாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரானது 2011 முதல் 2016 வரையில் டி20 பார்மேட்டில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் டி10 பார்மேட்டாக நடத்தப்பட்டது.

தற்போது 10, 10 ஓவர்களாக 20 ஓவர்கள் கொண்ட டெஸ்ட் போட்டி போன்று நடத்தப்படுகிறது. தற்போது வரையில் 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சென்னை ரைனோஸ் அணியானது 2 முறையும், தெலுகு வாரியர்ஸ் அணியானது 4 முறையும், மும்பை ஹீரோஸ் அணி ஒரு முறையும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியானது ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.

கடந்த 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் சிசிஎல் தொடர் நடத்தப்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த சிசிஎல் தொடரில் தெலுகு வாரியர்ஸ் சாம்பியனானது. இந்த நிலையில், தான் தற்போது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை ரைனோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுகு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், போஜ்பூரி தபாங்க்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷேர் என்று 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வந்தன.

இதில், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதே போன்று பஞ்சாப் டி ஷேர், போஜ்பூரி தபாங்ஸ் ஆகிய அணிகள் எலிமினேட் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், தான் 4ஆவது இடத்திற்கான போட்டியில் சென்னை ரைனோஸ் மற்றும் தெலுகு வாரியர்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியிருந்தது.

இதற்கான போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை ரைனோஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை ரைனோஸ் தோல்வி அடைந்தால் தெலுகு வாரியர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக முன்னேறும். சென்னை ரைனோஸ் வெற்றி பெற்றால் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் தெலுகு வாரியர்ஸ் அணிகள் எலிமினேட் செய்யப்படும்.

இந்த நிலையில், தான் நேற்று முதலில் பேட்டிங் செய்த கேரளா ஸ்டிரைக்கர்ஸ் 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய சென்னை ரைனோஸ் அணிக்கு விக்ராந்த் மற்றும் ரமணா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அடுத்து சாந்தணு அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க சென்னை ரைனோஸ் 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்து 26 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து கேரளா ஸ்டிரைக்கர் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 43 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு சென்னை ரைனோஸ் அணி பேட்டிங் செய்தது.

இதில் சென்னை ரைனோஸ் 4.1 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. 3ஆவது இடத்திலிருந்த மும்பை ஹீரோஸ் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வரும் 15ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios