#IPL2021 இவ்வளவு கேவலமாவா ஆடுவீங்க..? கேகேஆரை கடுமையாக விளாசிய பிரயன் லாரா
மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி ஆடிய விதத்தை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் லெஜண்ட் பிரயன் லாரா.
ஐபிஎல் 14வது சீசனில் கேகேஆர் அணி ஆடிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது கேகேஆர் அணி. ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வெறும் 153 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கில்லும் ராணாவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 72 ரன்களை சேர்த்து கொடுத்தனர். கில் 33 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் திரிபாதி மற்றும் கேப்டன் மோர்கன் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அரைசதம் அடித்த ராணா, 15வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தபோது, கேகேஆர் அணியின் ஸ்கோர் 122 ரன்கள்.
கடைசி 5 ஓவரில், 30 பந்தில் வெறும் 30 ரன் மட்டுமே கேகேஆர் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக் ஆகிய 2 ஃபினிஷிங் ரோல் செய்யக்கூடிய அதிரடி வீரர்கள் இருந்தும் கூட, கடைசி ஓவர் போட்டியை எடுத்துச்சென்று வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்து கேகேஆர் அணி தோற்றது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
30 பந்தில் 30 ரன் தேவை என்ற நிலையில், ரசலும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அடுத்த சில பந்துகளில் போட்டியை முடித்துவிடுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு பேரதர்ச்சிதான் காத்திருந்தது. வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி போட்டியை விரைவில் முடிக்காமல், எளிய இலக்கை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்றதுதான், கேகேஆரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 8 ரன் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 15 பந்தில் 9 ரன் மட்டுமே அடித்த ரசல், கடைசி ஓவரில் தான் ஆட்டமிழந்தார். ஆனாலும் அந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்திருந்த கேகேஆர் அணி, வெற்றியை மும்பை அணிக்கு தாரைவார்த்துவிட்டது.
இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் ஆடிய விதம் குறித்து பேசிய பிரயன் லாரா, மும்பை இந்தியன்ஸ் அணி சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பந்துவீசவைத்தது. பேட்ஸ்மேன்கள் தங்களது இயல்பான ஷாட்டுகளை எளிதாக ஆடக்கூடிய ஆடுகளம் அல்ல சென்னை ஆடுகளம். நேரமெடுத்து ஆடவேண்டிய ஆடுகளம். சென்னை ஆடுகளத்தில் 145 ரன்களே சராசரி ஸ்கோர்.
நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டது என்பதற்காக அசால்ட்டாக ஆடக்கூடாது. கொஞ்சம் சுதாரிப்பாக ஆடவேண்டும். இடது கை பேட்ஸ்மேன்களே ரிஸ்ட் ஸ்பின்னரிடம் விக்கெட்டுகளை இழந்தனர். பெரும்பாலும் அப்படி நடக்காது. கேகேஆர் வீரர்கள் அலட்சியமாக ஆடியதுதான் தோல்விக்கு காரணம் என்று பிரயன் லாரா கடுமையாக விளாசியுள்ளார்.