இந்த லெட்சணத்துல டீம் எடுத்தால் எப்படி ஜெயிக்கிறது? இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த பிராட் ஹாக்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, மோசமான அணி தேர்வே காரணம் என்று ஆஸி., முன்னாள்வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பே இரு அணிகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிடும். அந்த அழுத்தத்தை எந்த அணி சிறப்பாக கையாண்டு ஆடுகிறதோ அந்த அணி தான் இதுவரை உலக கோப்பை தொடர்களில் ஜெயித்திருக்கிறது.
அந்தவகையில், ஒருநாள் உலக கோப்பையில் மோதிய 7 முறையும், டி20 உலக கோப்பையில் மோதிய 5 முறையும் என மொத்தமாக உலக கோப்பைகளில் மோதிய 12 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பைகளில் 100% வின்னிங் ரெக்கார்டை வைத்திருந்தது.
அந்த ரெக்கார்டை இந்த டி20 உலக கோப்பையில் தகர்த்தெறிந்தது பாகிஸ்தான். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.
பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி, ஆட்டம் முழுவதும் முழுக்க முழுக்க இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷாஹித் அஃப்ரிடி, யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோரால் சாதிக்க முடியாததை சாதித்து காட்டியது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. பாபர் அசாமின் கேப்டன்சியும் மிக அருமையாக இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. அதற்கு 6வது பவுலிங் ஆப்சன் இல்லாததும் ஒரு காரணம். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸுடன் இல்லாதது, இந்திய அணியின் காம்பினேஷனை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது. அவர் பந்துவீசாததால் 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஓரளவிற்கு நியாயமான 6வது பவுலிங் ஆப்சன் கேப்டன் கோலிக்கு கிடைக்கவில்லை. பந்துவீச முடியாத ஹர்திக் பாண்டியாவை ஆடும் லெவனில் சேர்ப்பது, இனிவரும் போட்டிகளிலும் இந்திய அணி காம்பினேஷனை வலுவில்லாததாக்கும்.
ஹர்திக் பாண்டியாவை ஆடவைத்தது மற்றும் ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூரை ஆடவைக்காதது என இந்திய அணி தேர்வில் செய்த சில தவறுகள் தான் தோல்விக்கு காரணம் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், ஹர்திக் பாண்டியாவை ஆடவைத்தது தான் இந்திய அணி செய்த பெரிய தவறு. ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூரையும், ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அஷ்வினையும் ஆடவைத்திருக்கலாம். அப்படி ஆடவைத்திருந்தால், ஜடேஜா 6ம் வரிசையிலும், 7ம் வரிசையில் தாகூரும், 8ம் வரிசையில் அஷ்வினும் பேட்டிங் ஆடலாம். பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் பந்துவீச வேண்டும் என்று பிராட் ஹாக் தெரிவித்தார்.