பகலிரவு டெஸ்ட்.. தாதாவுக்கும் பிசிசிஐ-க்கும் காத்திருக்கும் கடும் சவால்
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பெரும் ஆதரவாளரான கங்குலி, பிசிசிஐ தலைவரானதுமே அதை நடத்திக்காட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டார். வங்கதேச கிரிக்கெட் வாரியமும் ஒப்புக்கொண்டதை அடுத்து கொல்கத்தா டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவிருக்கும் நிலையில், பிசிசிஐக்கு அந்த போட்டியை நடத்துவதில் கடும் சவால் ஒன்று உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை நேரில் காணும் ரசிகர்கள் குறைவாகவே உள்ளனர். ஸ்டேடியத்திற்கு குறைவான கூட்டமே வருவதால் வருமானமும் குறைகிறது. போட்டி முழுவதும் பகலில் நடத்துவதால்தான் ரசிகர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. பகலிரவு போட்டியாக நடத்தினால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு ரசிகர்கள் மாலை நேரத்தில் போட்டியை காண வருவார்கள் என்பதால் பகலிரவு போட்டியாக நடத்தலாம் என கங்குலி தெரிவித்திருந்தார்.
அதேபோலவே வங்கதேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்துவது குறித்து கேப்டன் கோலியுடன் ஆலோசனை நடத்தி அவரது ஒப்புதலையும் பெற்று, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. எனவே இந்திய அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான தரமான பிங்க் நிற பந்துகளை தயாரிக்க வேண்டிய அவசியம். இரவில் மின்விளக்குகள் வெளிச்சத்தில் ஆடுவதால், பந்து வீரர்களின் கண்களுக்கு நன்றாக தெரியவேண்டும் என்பதற்காக, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துகளை விட பிங்க் நிற பந்துகள் நன்றாக தெரியும் என்பதால் அவை பயன்படுத்தப்படுகின்றன.
எனவே இந்திய சூழலுக்கு ஏற்ற தரமான பிங்க் நிற பந்துகளை தயாரிக்க வேண்டும். இந்தியாவில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்துகள் 20-30 ஓவர்கள் வீசப்பட்டவுடன் மிகவும் சாஃப்ட் ஆகிவிடும். இந்திய மைதானங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அளவுக்கு மென்மையானவையாக இருக்கிறது. மிகவும் கடினமாக இருக்கும். அதனால் பந்துகள் விரைவில் நிறத்தை இழப்பதோடு அதன் தன்மையும் மாறும். எனவே அதுமாதிரியெல்லாம் இல்லாமல், தரமான மற்றும் நிறம் மாறாத பிங்க் நிற பந்துகளை தயாரிக்க வேண்டும். ஏனெனில் இரவில் லைட் வெளிச்சத்தில் ஆடுவதால் பந்தின் நிறம் குறைந்துவிட்டால் வீரர்களுக்கு அது பெரும் சவாலாக இருக்கும்.
போட்டிக்கு மற்றும் பயிற்சிக்காக இரு அணி வீரர்களுக்கும் வழங்குவது என 25 பந்துகளையாவது தயாரித்தாக வேண்டும். டியூக்ஸ் அல்லது கூக்கபரா பிங்க் நிற பந்துகளை அதிகமாக பெற்றிருக்க வேண்டும்.