ஜென்டில்மேன் கேமான கிரிக்கெட்டில் இனரீதியான வசைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கக்கூடாது; இதுமாதிரி விவகாரங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வெறும் 244 ரன்கள் மட்டுமே அடித்தது.
94 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸி.,யின் கை ஓங்கியிருக்கிறது.
இந்த போட்டியின் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜை இன ரீதியாக சில ஆஸி., ரசிகர்கள் திட்டியுள்ளனர். இந்த போட்டியை காண வந்த பார்வையாளர்களில் சிலர் மது அருந்திவிட்டு, பும்ரா மற்றும் சிராஜை இனரீதியாக திட்டினர். ஆஸி., ரசிகர்கள் இனவெறியை உமிழும் சம்பவங்கள் இதற்கு முன்பும் பலமுறை அரங்கேறியிருக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கள நடுவர்களிடமும், போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு இந்த விவகாரம் தெரியும். கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம். அதில் இதுமாதிரியான விஷயங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கோர்ட் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுமாதிரியான சம்பவங்கள் நடக்காத வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜீவ் சுக்லா வலியுறுத்தியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 9, 2021, 10:26 PM IST