ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியதன் காரணத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐபிஎல் 14வது சீசனில் இன்னும் 31 போட்டிகள் நடத்த வேண்டியுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் 14ம் தேதி முடிவடையவுள்ளது.

அதன்பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்துவது குறித்தும், டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் சீசனின் எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் நடத்துவதாக முடிவெடுத்த பிசிசிஐ அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை அமீரகத்தில் நடத்த முடிவு செய்ததற்கான காரணத்தை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெய் ஷா, செப்டம்பர் - அக்டோபர் இந்தியாவில் மழைக்காலம். எனவே அப்போது இந்தியாவில் நடத்துவது சரிப்பட்டுவராது. அதனால்தான் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை அமீரகத்தில் நடத்த முடிவெடுத்ததாக ஜெய் ஷா தெரிவித்தார்.