ஐபிஎல் 15வது சீசன் முழுவதையும் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கொரோனா 3ம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. எனவே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. எனவே ஐபிஎல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைகின்றன. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.
ஐபிஎல் 15வது சீசனில் 10 அணிகள் ஆடுவதால் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் ஐபிஎல் 15வது சீசன் முழுவதுமாக மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 சீசன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில், 15வது சீசனை அமீரகத்தில் நடத்த பிசிசிஐ விரும்பவில்லை. எனவே இந்தியாவில் நடத்த விரும்பும் பிசிசிஐ, மும்பையில் மட்டுமே மொத்த சீசனையும் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
