#IPL2021 ஃபைனல் எப்போது? பிசிசிஐயின் புதிய திட்டம்
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ புதிதாக ஒரு முடிவெடுத்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய 31 போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டிகளை வரும் செப்டம்பர் - அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவெடுத்தது பிசிசிஐ.
இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், செப்டம்பர் 18ல் தொடங்கி அக்டோபர் 10ல் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகமான டபுள் ஹெட்டர்களை(ஒரே நாளில் 2 போட்டிகள்) குறைக்கும் விதமாக ஒரு வார காலம் நீட்டிக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை இந்தியாவில் தொடங்குவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை பரவிவரும் நிலையில், டி20 உலக கோப்பை குறித்து முடிவெடுக்க ஐசிசியிடம் ஜூலை மாதம் முதல் வாரம் வரை அவகாசம் கோரியிருக்கிறது பிசிசிஐ.
இந்நிலையில், மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் 18 முதல் நடத்த தொடங்கி ஃபைனலை அக்டோபர் 10ம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், டபுள் ஹெட்டர்களை குறைக்கும் விதமாக அக்டோபர் 18ம் தேதி ஃபைனலை நடத்த பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேசியிருப்பதாகவும் தெரிகிறது.
செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் அமீரகத்தில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால் வீரர்களின் நலன் கருதி டபுள் ஹெட்டர்களை குறைக்கும் நோக்கில் அக்டோபர் 18ல் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.