பிரித்வி ஷாவை அப்ப வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கூப்புடுறீங்க..? பிசிசிஐ - இந்திய அணி நிர்வாகம் இடையே பூசல்
ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக பிரித்வி ஷாவை இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அழைக்கும் விவகாரத்தில் அணி நிர்வாகத்தின் அந்தர்பல்டி பிசிசிஐக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆனாலும் இந்திய அணியில் மயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 2 சிறந்த தொடக்க வீரர்கள் இருக்கின்றனர்.
ஷுப்மன் கில் இல்லாத நிலையில், மயன்க் அகர்வால் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறங்குவார். கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கும் திட்டத்தில் உள்ளது இந்திய அணி நிர்வாகம். எனவே மயன்க் அகர்வாலுக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் தேவை என்பதற்காக, இலங்கையில் இருக்கும் பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க திட்டமிட்டது இந்திய அணி நிர்வாகம்.
ரஞ்சி போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அபிமன்யூ ஈஸ்வரன் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவரை இறக்க இந்திய அணி விரும்பவில்லை. எனவே அவரைவிட சிறந்த வீரர் என்ற முறையிலும், தற்போதைய ஃபார்மின் அடிப்படையிலும் பிரித்வி ஷாவை அழைக்க விரும்பியது.
ஆனால் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு பிசிசிஐயே அதிருப்தியடைய செய்துள்ளது. பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு அனுப்பப்பட வாய்ப்பேயில்லை. அவர் இலங்கைக்கு எதிரான தொடரிலேயே ஆடுவார்.
இந்நிலையில், இந்திய அணி நிர்வாகத்தின் திடமற்ற முடிவு குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியுள்ளார். அப்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 24 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் பிரித்வி ஷாவை எடுக்கவில்லை. அதற்குள்ளாக அவரை அழைக்குமளவிற்கு என்ன மாற்றம் நடந்துவிட்டது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.