ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வது குறித்து வெளிநாட்டு வாரியங்களுடன் பிசிசிஐ ஆலோசித்துவருகிறது. 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எஞ்சிய 31 போட்டிகளை, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்கவுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கிரிக்கெட் தொடர்களில் ஆடுகின்றன. டி20 உலக கோப்பையும் நடக்கவுள்ளதால், தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால், சில நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகம் தான்.

குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுவது கண்டிப்பாக சந்தேகம். இந்நிலையில், வெளிநாட்டு வீரர்கள் ஆடுவது குறித்து, பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பிசிசிஐ அதிகாரி, அடுத்த சில வாரங்கள் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் இதுகுறித்து பிசிசிஐ பேச திட்டமிட்டுள்ளது. அவர்கள் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்க போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள், அவரவர் நாட்டு வீரர்களில் யார் யார் ஆடுவார் என்பது குறித்து தெரியப்படுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.