டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்குமா..? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்க ஜூலை மாதம் முதல் வாரம் வரை ஐசிசியிடம் அவகாசம் கோர முடிவெடுத்துள்ளது பிசிசிஐ.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
நாடே லாக்டவுனில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 14வது சீசன் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால், இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இந்தியாவில் நடத்துவதாக திட்டமிடப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பது இதுவரை உறுதியாகவில்லை.
இந்நிலையில், ஐபிஎல், டி20 உலக கோப்பை குறித்து முடிவெடுக்க இன்று பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தான் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை அமீரகத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் நான்கரை மாதங்கள் உள்ளதால், அதற்குள்ளாக இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட அதிக வாய்ப்புள்ளது. எனவே இறுதி முடிவை எடுக்க, ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரம் வரை, ஐசிசியிடம் அவகாசம் கோர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.